நானும் என்கணவரும் அம்மம்மா வீட்டுக்கு விருந்துக்கு தக்கலைக்கு அருகில் உள்ள ஊருக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து காலையில் 7 மணிக்கே கிளம்பினாலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வருவதற்குள் எட்டுமணியாகிவிட்டது. பின்னர் அங்கிருந்த சிற்றுண்டி கடையில் சாப்பிட்டோம். சாவகாசமா நாகர்கோவில் பிளாட்பாரத்துக்கு வந்துப்பார்த்தால் கூட்டம் அலைமோதியது. என்னவென்று விசாரித்ததில் பணகுடியில் கோவில் கொடைவிழாவானதால் பஸ்கள் நிரம்பி வழிந்தன.
9.30 மணி தாண்டியும் கூட்டம் அதிகமானதே தவிர குறையவே இல்லை. என்கணவர் போறபோக்கை பார்த்தால் கூட்டம்குறைய வாய்ப்பில்லை. நாம் ஏறிக்கொள்வோம். என்று சொல்லி கூட்டத்தோடு கூட்டமாக ஏறிவிட்டோம். உட்கார இடம் இல்லை. நின்றுகொண்டே வந்தோம். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு 25 ரூபாய். பஸ் வேகமாக சென்றாலாவது நிற்கும் பீலீங் வராது. ஆனால் பஸ்ஸோ வெகுமெதுவாக சென்றது எரிச்சலாக இருந்தது. நான் வள்ளியூர் வந்ததும் இடம்கிடைத்து உட்கார்ந்தேன். என்கணவரோ ஆரல்வாய்மொழி வந்ததும்தான் உட்கார்ந்தார்.
தொலைதூரம் செல்பவர்களை முதலில் உட்காரவைத்துவிட்டு பின்னர் மற்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இடம் ஒதுக்கலாம். அல்லது இதுபோல திருவிழா என்றால் அந்தஊருக்கு தனிபஸ் விடலாம். இதனால் தொலைதூரம் செல்பவர்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள், வசூல் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி பயணிகளை அலைக்கழிக்கிறாங்களே.. கூடுதல் பஸ்கள் இயக்கினால் பயணிகளுக்கு சிரமமிருக்காது.
***********************************
ஒருதடவை எங்கஊருக்கு சென்றுவிட்டு திருநெல்வேலிக்கு திரும்ப பஸ்கிடைக்கவில்லை. அப்போது சென்னை செல்லும் விரைவுபோக்குவரத்து கழக பஸ் வந்தது. எங்கவாப்பா நீங்க இரண்டுபேரும் இந்தபஸ்ல போங்க. வேற பஸ் கிடைக்கிறமாதிரி தெரியவில்லை என்று சென்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அந்தபஸ் சொகுசுபேருந்து என்பதால் எந்த அசௌகரியமில்லாமல் இனிய பயணமாக இருந்தது.
நாங்கள் வந்தபஸ் திருசெந்தூரிலிருந்து நெல்லை வழியாக சென்னைக்கு செல்வதால் டீசல்போட நெல்லை டிப்போவுக்குள் சென்றது. அந்தசமயம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னை செல்லும் பஸ் டிப்போவுக்குள் நுழைந்தது. அப்போது அந்த டிப்போ ஊழியர் அந்தபஸ் டிரைவரிடம்,
"எப்பா டாப்புல எதாவது லக்கேஜ் வச்சிருக்கீயா"
"இல்லியே அண்ணே எதுவும் சாமான் இல்லையே"
"அப்படியா மேல எதோ இருக்கிறமாதிரி தெரியுதே"
அப்படியா அண்ணே என்றவாறு டிரைவரும் சிலஆட்களும் மேலே ஏறிப்பார்த்தால் ஒரு பத்து பதிமூன்று வயதில் ஒரு சிறுவன் கம்பியை பிடித்தபடி பம்மிபோய் படுத்துகிடந்தான்.
உடனே எல்லோரும் சேர்ந்து அவனை கீழே இற்க்கினர். கூட்டம் கூடிவிட்டது என்கணவர் உட்பட எல்லோரும் அந்தபையனை சூழ்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தனர். நான் பஸ்ஸில் இருந்தவாறே வேடிக்கை பார்த்தேன்.
விசாரித்ததில் அவன், அவங்க அம்மா அவனை அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறானாம். உடனே அந்தபஸ் டிரைவர் அட பாவிப்பயலே எங்கேயிருந்துல ஏறினே?. அவன் மார்த்தாண்டத்திலே ஏறிவிட்டானாம். எல செத்தமூதி! எப்படில்லே பஸ் டாப்புல கிடந்தே.. ரோட்டுல எத்தனை திருப்பங்கள் இருக்கு. எவ்வளவு வேகமா வந்திருப்பேன். நான் எத்தனிதடவை பிரேக் அடிச்சிருப்பேன். செத்துக்கித்து தொலைந்திருந்தேன்னா யாருல பதில் சொல்றது. என்வண்டிதான் கிடைச்சுதா.. அண்ணே உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. நல்லவேளை சொன்னீங்க.. இல்லைன்னா என்கதி என்னஆகிருக்கும். என்று டிரைவர் கண்ணீர்மல்க கூறினார்.
அவனுக்கு எல்லோரும் அறிவுரைகள் சொன்னார்கள். பின்னர் டிப்போ அதிகாரிகள், அவனது வீட்டுமுகவரி தொலைபேசி எண் கேட்டு அவனது பெற்றோரை வரவழைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
எங்கள் பஸ் கிளம்பியது....
டிஸ்கி: மேலே உள்ள பஸ் படத்தில் நான் கிடையாது.., கூகிளில் தேடியது.
,